தில்லை நடராஜர் கோவிலில் குடியரசுத் துணைத் தலைவர் சாமி தரிசனம்!

Estimated read time 1 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சுவாமி தரிசனம் செய்தார்.

மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை குடியரசுத் துணைத் தலைவர் மேற்கொண்டுள்ளார்.

முதல் நாளில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்திய சட்டமன்ற அமைப்புகளின், தலைமை அதிகாரிகளின் 84-வது மாநாட்டின் நிறைவு விழாவில், குடியரசுத் துணைத்தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர், புதுச்சேரி வந்த குடியரசுத் துணைத்தலைவரை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர். பிற்பகலில், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இரண்டாவது நாளான இன்று, புதுச்சேரியில் உள்ள மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின், சிதம்பரம் நடராஜர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, சிதம்பரம் வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து குடியரசுத் துணைத் தலைவரை வரவேற்றனர். பின்னர், சுவாமி தரிசனம் செய்தார்.

இதுகுறித்து குடியரசுத் துணைத் தலைவர் தனது எக்ஸ் பதிவில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் தரிசனம் செய்து, நாட்டு மக்கள் அனைவரும் நலமடைய வேண்டி பிரார்த்தனை செய்தேன். நடராஜப் பெருமான் நம் மனங்களில் இருந்து அறியாமையையும், தீமையையும் அகற்றி, இந்த பிரபஞ்சத்தை அமைதி மற்றும் செழிப்புடன் அருள்பாலிப்பார் என்று பதிவிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author