புதிய வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையா? – மத்திய அரசு விளக்கம்!

Estimated read time 1 min read

புதிய வகை கொரோனாவுக்கு வீரியம் குறைவு என்பதால், தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, பின் உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.

கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமிக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது. தற்போது, ஒமிக்ரான் பிஏ.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு, ஜே.என். 1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி உள்ளது.

உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடுகள் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தவும், முகக்கவசம் அணியவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “குளிர்காலம் என்பதால், புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் வீரியம் குறைவு என்பதால், தடுப்பூசி தேவையில்லை. பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர்.

ஜே.என்.1 வகை கொரோனா வைரஸால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ளது. புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author