கவிச்சுவை நூலாய்வு

Estimated read time 1 min read

Web team

84818_thumb.jpg

நூலின் பெயர் : கவிச்சுவை
நூலாசிரியர் : இரா. இரவி

மதிப்புரை நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

புதிய உறவு – நூல் உறவு :புதுவை

வெளியீடு வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கங்கள் : 180
விலை : ரூ.120..

இந்நூலாசிரியர் அய்க்குக் கவிஞர், கவிஞர் திலகம், துளிப்பாச் சுடர், புலிப்பால் இரவி, இணையக் கவிஞர் என்று அவரவர்கள் விருப்பப்படி விளித்தாலும், மதுரை கவிஞர், மதுரக் கவிஞர் என்பதில் தனித்துவம் மிகுந்த கவிஞர் இரா. இரவி. உள்நாட்டு இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள், மின்னிதழ்கள், முகநூல்கள், புலனம் என எங்கும் நிறைந்திருக்கும் இயற்கையென எழுத்து வடிவில் வீற்றிருப்பவர். இவர், எல்லோர் உள்ளத்திலும் நிறைந்திருப்பவர்.

இவர் மற்றவரை கவிதையால் ஈர்த்ததை விட, வெள்ளை மனத்தால், முகம் மலர்ந்த சிரிப்பால், கள்ளங்கபடமற்ற நட்பால் ஈர்த்தவர். இப்படி சொல்வதால் இவரின் கவிதை ஈர்க்கவில்லையோ என்றால் உண்மையில் கவிதையில் “புவிஈர்ப்பு விசை போல கவிதை ஈர்ப்பு விசை உண்டு என்பதாலேயே இவ்விமர்சனம் எழுத முடிகிறது.

இவரின் அய்க்குக் கவிதைகளில் நூல் மதிப்புரைகளில் கொட்டிக் கிடக்கும் உவமைகள், வெண்செந்துறை யாப்பை நெருங்கியுள்ள இந்நூலில் காண முடியாமல் உள்ளது. காரணம் ஆடை அலங்காரமென்ற உவமைகள் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே மனத்தின் எண்ணங்களை தடையின்றி, வாசிக்கும் விதத்தில் கவிதைகளை எளிமையான சொற்களால் வலிமையாக பகர்ந்துள்ளார்.

இனி நூலெனும் பூந்தோட்டத்தில் நுழைந்து, சில கவிதைப்பூ இதழ்களின் சிலவரிகளை பருகலாம் வாருங்கள். நூலின் முழு தேனையும் சுவைக்க நூலை வாங்குங்கள்.

சுவைகளில் பல்வேறு சுவைகள் இருப்பது போல், நூலிலுள்ல எழுபத்தெட்டுக் கவிதைகளையும் எழுபிறப்பு, ஏழுலகம், கடையெழு வள்ளல், ஏழு அதிசயம், ஏழுமலை, ஏழுகடல், ஏழிசை என்று சுட்டும் வண்ணம் பிரித்து முறையே சான்றோர் உலகு, தமிழ் முற்றம், பெண்ணுலகு, உறவுகளின் உன்னதம், நம்பிக்கை நாற்றுகள், சமுதாய வழி, உதிரிப் பூக்கள் என ஏழு தொகுதிகளாக்கி, நூலுக்கு முக்கனி, முப்பால், மூவேந்தர், முக்கடல், முக்காலம், முச்சங்கம், மும்மூர்த்தி, முச்சுவை என்ற அடிப்படையில் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன், முனைவர் அ. கோவிந்தராசு, வித்தகக் கவிஞர் பா.விஜய் ஆகியோரின் அணிந்துரை பெற்று அணியாக்கியுள்ளார். இந்நூலாசிரியர் கவிஞர் இரா. இரவி அவர்கள்.

இன்றைய காலச்சூழலில் கலப்படம் இல்லாத பொருள் எது? என்று கண்டறிய இயலாத வண்ணம் உணவு தானியம், காய்கறி, கனி வகைக்கள் எல்லாமே கலப்படமானதால் பிறக்கும் மழலை கூட நோயுடன் பிறக்கிறது என்ற சமுதாயப் பார்வையை உவமையாக்கி இதே அடிப்படையில் மொழி கலப்பானால் மொழி கெடும் என்பதை,

“உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும்
உன்னத மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு”

என்று தேமதுரத் தமிழோசை தமிழகத்தில் ஒலிக்கட்டும்!” என்ற கவிதையில் வலியுறுத்தியவர், செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்! என்ற தலைப்பில்,

“தாய்மொழி களுக்கு எல்லாம் தாய்மொழி
தமிழ்மொழி என்பதை அறியவில்லை தமிழர்!”

என்று சொல்லி, தமிழர் தம் மொழியின் பெருமையை அறியாமல், கேவலம் வயிற்று பிழைப்புக்காக தமிழை ஒதுக்கி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளைப் பிடித்து, தொங்குவதை நாசுக்காய வலியுறுத்துகிறார். தமிழ்நாட்டின் மொழிகொள்கை இருமொழி கொள்கையாய் இருப்பதும் ஒரு காரணியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

“உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்தே என்று
உயிர்த்த எழுத்துகள் உன்வசம் இருக்க கிரந்தம் எதற்கு?”

என்று கிரந்த எழுத்துகளை தமிழில் தவிர்க்கும்படி வினவுவதை தமிழில் எழுதுபவர்கள் கையாள வேண்டும் ; தனித்தமிழில் எழுத வேண்டும் என்பதை நானும் நீண்ட காலமாய வலியுறுத்தி வருகிறேன், தமிழர் மாறுவார்களா? பார்ப்போம்.

“கரும்பு தின்னக் கூலி தந்திட வேண்டுமா?
கன்னித் தமிழைக் கற்க அறிவுறுத்தல் வேண்டுமா?

இப்படி பழமொழியை உவமையாக்கி தமிழரை கண்டு, கேட்க வேண்டிய வினாவை கொடுத்துள்ளார். “தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! எனும் கவிதையில்’ பாராட்டுக்கள்.

நாடும், அரசியல் சட்டமும், ஆண்களும், மதக்கோட்பாடுகளும் இன்னும் பலவகையிலும் விடுதலை வழங்கினாலும், சிலந்தி வலையில் சின்ன பூச்சி தானாக வந்து எப்படி மாட்டிக்கொள்கிறதோ அப்படி பெண்கள் நாகரிக வேட்கை ஆசையால் தன்னைத்தானே எவை எவையில் அடிமைகளாக இருக்கிறார்கள்? என்று, ‘பெண்ணால் சிவப்பானது பிரபஞ்சம் என்கின்ற தலைப்பில் கவிஞர் பட்டியலிட்டுள்ளார். இவற்றில் இரண்டு ஆசைகளை மட்டும் சுட்டுகிறேன். அவை …

“பொன்நகை மீதான ஆசையை ஒழியுங்கள் ;
புத்தன் போதனையை நினைவில் கொள்ளுங்கள்!”

“பட்டுப் புடவையின் மீதான ஆசையை ஒழியுங்கள் ;
பட்டுப்பூச்சியின் வாழ்க்கை உங்கள் கைகளில்!”

என்று விழிப்புணர்வூட்டி பட்டுப்புழு மீது இரக்கங்காட்டி, வாடியப் பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் குணத்தை நினைவூட்டியுள்ளார்.

வரலாற்று வீரமங்கையர் போலவே இக்கால் மங்கையரும் கொடுமை கண்டு கொதித்தெழுந்து புயலெனப் புறப்பட்டு வீரநடையிட்டு வெற்றிக்கொள், புவியை ஆளப்பிறந்தவன் நீ!” என்று, ‘புயலெனப் புறப்படு பெண்ணே!’ என்ற தலைப்பில் வீரத்தை ஊட்டிய கவிஞர், “தாலாட்டுப் பழகுதல் நன்று!” என்ற கவிதையில் தமிழர் வாழ்வில் ஒன்றி, பின்னிப் பிணைந்த அடையாளமான தாலாட்டு, ஒப்பாரி போன்ற கலைகள் வழக்கொழிந்தது. மீண்டும் உயிர் கொடு பெண்ணே!” என்று இடம், பொருள், ஏவல் என்பதற்கேற்ப பெண் செயல்பட வேண்டும் என்று நடைமுறை வாழ்வியலை சுட்டிய விதம் மிக அருமை.

‘கவலைக்கு விடுமுறை’ எனும் கவிதையில் யாருக்குத்தான் கவலை இல்லை? கவலை என்பது உயர்ந்தவனுக்கும் தாழ்ந்தவனுக்கும் பொதுவானது என்ற நீண்ட பட்டியலிட்டு இறுதியில்,

“தூரத்து வெளிச்சம் கண்களை உறுத்தும் ;
பக்கத்து வெளிச்சமே பயன் தரும்!”

என்று அறிவியல் கண்ணோட்டத்தோடு ஜென் தத்துவ்வாய் சொல்லிய பாங்கு மிக அழகு!

‘இரும்பை செம்மையாக்குவது சிறப்பு!’ என்ற கவிதையில்,

‘ஒற்றைச் சிறகோடும் உயரம் செல்ல்லாம் ;
உள்ளத்தில் ஒளி பிறந்தால் வழியும் பிறக்கும்!’

இப்படி தன்னம்பிக்கை, முயற்சி, உள்ளொளி ஆகியவற்றை ஊட்டிய கவிஞர், ‘கோடை மழையை வரவேற்போம்!” எனும் கவிதையில் இயற்கையை மதித்து வாழ,

“இயற்கை நம்மைக் கைவிடாமல் காக்கும் ;
இயற்கையை மதித்தால் நன்மை தருமே!”

என்கிறார்.

மாந்தர் வேறுபாடு பாகுபாடு இன்றி இருத்தல் வேண்டி, ‘பரிதிப் பார்வை’ என்ற தலைப்பில்,

“பரிதியின் பார்வை பாரபட்சமற்றது! என்று நினைவூட்டி மாந்தரிடம் பொதுமையை எதிர்பார்க்கிறார், அருமை.

‘துப்பாக்கிக் குண்டுகளால் சிதைக்க முடியாது!’ என்ற கவிதை கருநாடகாவில் இந்துத்துவா ஈன வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுவாதிகளான கௌரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோர்க்காக புதிய உறவு இதழ் வாயிலாக ஆசிரியர் மஞ்சக்கல் உபேந்திரன் நடத்திய கவிதைப் போட்டிக்காக எழுதியதில்,

“விடுதலை வீரனின் விடுதலை தாகத்தை
வெளிவரும் துப்பாக்கிக் குண்டுகளால் சிதைக்க முடியாது!”

என்ற வரிகள் அண்மையில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கும் பொருந்தும். இப்படி கவிதை தோறும் சுவை மிகுந்த பொதுமை கருத்துப் பேழையாக இந்நூல் திகழ்கிறது! அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல். நூலாசிரியர் கவிஞர் இரா. இரவி அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றேன்.

Please follow and like us:

You May Also Like

More From Author