காதல் கவிதைகள்.

Estimated read time 0 min read

Web team

IMG_20240316_085114_558.jpg

உன்னை வழியனுப்பும்
உன் அம்மா பார்த்துப் போமா !
என்கிறார்கள் !
சாலையில் கடந்தும் செல்லும் நீ
என்னை பார்த்துவிட்டுத்தான்
செல்கிறாய் !

பார்த்து விட்டனர் ! கவிஞர் இரா .இரவி !
யாரும் பார்க்காதபோது
இருவரும் பார்த்துக் கொள்கிறோம் !
நாம் பார்த்துக் கொள்வதை
எல்லோரும் பார்த்து விட்டனர் !

அழகோ அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ பேசுவது அழகுதான்
நான் பேசாமலே
அதனை ரசிப்பது வழக்கம் !
ஆனாலும்
நீ பேசாமல்
இருக்கும்போதோ
அழகோ அழகு !
கொள்ளை அழகு !
.
அழித்த கோட்டை ! கவிஞர் இரா .இரவி !
உச்சி எடுத்து சீவ வேண்டாம் என்று
அன்று நீ வேண்டுகோள் விடுத்தாய் !
இன்று வரை உச்சி எடுப்பதில்லை !
கிழித்த கோட்டை தாண்டுவதில்லை
என்பதை போல
நீ அழித்த கோட்டை
நான் போடுவதே இல்லை !

தொட்டு விட்டது ! கவிஞர் இரா .இரவி !
நெற்றியில் நீ வைத்த
முத்தம் !
முத்தமே அல்ல !
என்னுள் யுத்தம் செய்தது !
ஊடுருவி உயிர் வரை சென்று
தொட்டு விட்டது !

சத்து ! கவிஞர் இரா .இரவி !
இதழ்களில் நடந்த முத்தம்
நதி கடலில் கலந்த
நல்ல சங்கமமாய் !
கடலில் கிடைப்பது முத்து !
முத்தத்தில் கிடைப்பது சத்து !

எனக்கு வலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
உன் புகைப்படத்தை
அஞ்சலில் அனுப்ப வேண்டாம் !
மின் அஞ்சலில் அனுப்பு போதும் !
அஞ்சலில் அனுப்பினால்
அஞ்சல்காரர் உரை மீது
பதிக்கும் முத்திரைகள்
உனக்கு வலிக்காவிட்டாலும்
எனக்கு வலிக்கும் !

அது எப்படி ? கவிஞர் இரா .இரவி !
ரோஜா அழகுதான் !
உலகம் அறிந்த உண்மைதான் !
நீ தலையில் சூடியதும்
ரோஜாவின் அழகு
குறைந்து விடுகிறது !
உன் அழகோ
கூடி விடுகிறது !
அது எப்படி ?

என் சுவாசமே நீதானே ! கவிஞர் இரா .இரவி !
மல்லிகை வாசம்தான் !
ஆனால்
உன் வாசத்தின் முன்னே
மல்லிகை வாசம்
தோற்று விடுகின்றது !
உன் வாசத்திற்கு இணையான
வாசம் உலகில் இல்லை
என் சுவாசம் சொல்லியது !
என் சுவாசமே நீதானே !

எல்லாமே அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ நின்றால் அழகு !
நீ நடந்தால் பேரழகு !
நீ பார்த்தால் அழகு !
நீ முறைத்தால் பேரழகு !
நீ சிரித்தால் அழகு !
நீ சிகை கோதினால் பேரழகு !
எல்லாமே அழகு !

அழகு கூடி விடும் ! கவிஞர் இரா .இரவி !
ஆடைகளில் சுடிதார்
அழகுதான் !
அனைவரும் அறிந்ததுதான் !
ஆனாலும்
அவள் அணிந்ததும் சுடிதார்
அழகு கூடி விடும்
அற்புதம் நிகழ்த்துவது
அவளின் அழகு !

காண வந்தேன் ! கவிஞர் இரா .இரவி !
கடவுள் நம்பிக்கை
எனக்கு
இல்லாவிட்டாலும்
திருவிழாவிற்கு வந்தேன்
கடவுளை வணங்க அல்ல !
கன்னி உன்னைக் காண
வந்தேன் !
கடவுளுக்காக வந்தவர்கள்
கடவுளை தரிசிக்க
உனக்காக வந்த நான்
உன்னை தரிசித்தேன் !

.நினைத்தாலே இனிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
சுவைத்தால்தான் இனிக்கும்
செய்த இனிப்பு
நினைத்துப் பார்த்தாலே
இனிக்கும்
இனிய காதல் !

பாட்டு ! கவிஞர் இரா .இரவி !
என் செல்லிடப் பேசியில்
எந்தப் பாட்டையும்
வைக்கவில்லை நான் !
ஏன் தெரியுமா ?
பாட்டுப் பிடித்த ஆர்வத்தில் நீ
பேசாமல் இருந்து விடக்
கூடாது !

Please follow and like us:

You May Also Like

More From Author