ஈரான் அரசுத் தலைவர் செயத் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 20ஆம் நாள், ஈரான் முதன்மை துணை அரசுத் தலைவர் முகமது மொக்பருக்கு இரங்கல் செய்தி அனுப்பினார்.
அவர் சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, முகமது மொக்பர், அரசுத் தலைவர் ரைசியின் குடும்பத்தினர், ஈரான் அரசு மற்றும் மக்கள் ஆகியோருக்கு மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்தார்.
ஷி ச்சின்பிங் இச்செய்தியில் கூறுகையில், அரசுத் தலைவர் ரைசி பதவி ஏற்றது முதல் இதுவரை, ஈரானின் பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மையைப் பேணிக்காத்து, நாட்டின் வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னேற்றுவதற்கு முக்கிய பங்காற்றிய அதேவேளையில், சீன-ஈரான் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை வலுப்படுத்துவதற்கு ஆக்கமுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சீன-ஈரான் பாரம்பரிய நட்புறவைச் சீன அரசு மற்றும் மக்கள் மதித்து வருகின்றனர். இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், சீன-ஈரான் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு இடைவிடாமல் வளர்ச்சியடைவது உறுதி என்று தெரிவித்தார்.