மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் சீசன் நிலவி வருகிறது.
இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் உறை பனி சீசன் தாமதமானது. இருந்த போதும் கடும் குளிர்ந்த சீதோஷ்ணம் காணப்படுகிறது.
மலை கிராமங்களில் பனி மூட்டத்துடன் கூடிய மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி பகல் பொழுதையும், ரம்மியமாக்கி வருகிறது. கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மற்றும் ஏரி பகுதியில் வெண் நுரையுடன் கடல் அலைகள் வருவது போல பனி மூட்டம் காணப்படுகிறது.
இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர். விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.