திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சந்தன காப்பு, தங்க கிரீடம், வைர ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார். இதனை அடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல திருச்சி வயலூரில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பால்குடம் மற்றும் காவடி சுமந்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த தைப்பூச தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேர் விழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து, நாள் தோறும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டத்தையொட்டி அதிகாலை முருகப்பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து, வள்ளி – தெய்வானை உடன் முத்துகுமாரசாமி தேரில் எழுந்தருளினார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
