நிர்வாக குளறுபடி காரணமாக குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் ஒத்திவைப்பு – தேர்வர்கள் சாலை மறியல்!

Estimated read time 1 min read

குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் நிர்வாக குளறுபடி காரணமாக தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது, தேர்வர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15-ந்தேதி வெளியானது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 பேர் எழுதினார்கள். இதில் குரூப்-2 பதவிகளில் ஆயிரத்து 126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9 ஆயிரத்து 457 பேரும் தகுதி பெற்றவர்களாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. அவர்களுக்கான முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் 47 மையங்களில் இன்று நடைபெறவிருந்தது.

சென்னையில் 7 மையங்களில் மூன்றாயிரத்து 221 பேர் தேர்வு எழுத இருந்த நிலையில், நிர்வாக குளறுபடி காரணமாக குழப்பம் ஏற்பட்டது. சென்னை அரும்பாக்கத்தில் தேர்வு எழுத 700 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் 150 பேருக்கு மட்டுமே இருக்கை ஒதுக்கப்பட்டதால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் நிர்வாக குளறுபடியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You May Also Like

More From Author