நாடு முழுதும், ரேஷன் பொருட்கள் வினியோக திட்டத்தை முற்றிலும், ‘டிஜிட்டல்’ மயமாக்கும் முறைக்கு 25 ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிதி ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் ரேஷன் பொருட்கள் வினியோகத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.16-வது நிதிக்குழுவின் பதவிக் காலத்திற்குள் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்காக மத்திய அரசின் பங்காக 25 ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரேஷன் பொருட்களுக்கான போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் பொருட்களை கையாளுதல் ஆகியவை நவீனப்படுத்தபடவுள்ளதாக கூறினார். ஏஐ, ‘மெஷின் லேர்னிங்’, கணினி மொழி செயலாக்கம் மற்றும் ‘பிளாக்செயின்’ போன்ற உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரேஷன் வினியோக முறையை நவீனப்படுத்துவதே ‘சார்தக் பி.டி.எஸ்.திட்டத்தின் நோக்கம் என தெரிவித்தார்.
