கட்சி சார்ந்து பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற பார்வை முக்கியமானது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “பாஜகவைப் பற்றி பேச வேண்டாம் என்று எங்களை முதலமைச்சர் தடுக்கவில்லை. அப்படியென்றால் எங்கள் கருத்தில் அவருக்கு உடன்பாடு இருக்கு என்று அர்த்தம். எங்கள் கூட்டணியில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. எங்களின் குரலை முதலமைச்சரின் குரலாக எடுத்துக் கொள்ளலாம். ‘talk less… work more’ என்பதை பின்பற்றுகிறார் முதலமைச்சர். கட்சி சார்ந்து பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற பார்வை முக்கியமானது. குடிமக்கள் பாதிக்கப்படும் போது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு ஏதோ ஒரு வடிவில் உதவ வேண்டும்.
விபத்து அல்லது வன்முறையில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதோடு அவர்களின் தலைமுறையினரைப் பாதுகாக்க அரசுப் பணி வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை ஒரு கட்சி சார்ந்தவர்கள் என்று பார்ப்பதை விட பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற பார்வை முக்கியமானது. இது போன்று பாதிக்கப்படுகிற யாருக்கும் தமிழ்நாடு அரசு பணி வழங்குவது என்பதை ஒரு நடைமுறையாக கொண்டுவருவது நல்லது எனக் கருதுகிறேன்.குடிமக்கள் பாதிக்கப்படும்போது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு ஏதோ ஒரு வடிவில் உதவ வேண்டும்” என்றார்.
