அரசுப் பேருந்தை எடுத்துக்கொண்டு கறி விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநரால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு நிலவியது.
ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு பயணிகளுடன் புறப்பட வேண்டிய அரசுப் பேருந்தை அதன் ஓட்டுநர் திடீரென தடம் மாற்றி, சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேய்க்கரும்பு பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு மண்டபத்தில் ஓட்டுநருக்கு நெருக்கமானவர்களின் காதணி விழா நடந்ததே இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. அரசுப் பேருந்தை நடுரோட்டிலேயே சாவியைக் கூட எடுக்காமல் அப்படியே போட்டுவிட்டு, காதணி விழா மண்டபத்திற்குள் ஓட்டுநர் நுழைந்துள்ளார்.
தனுஷ்கோடி செல்ல வேண்டிய பயணிகள் பேருந்துக்காக நீண்டநேரம் காத்திருந்த நிலையில், ஓட்டுநரோ மண்டபத்தில் பரிமாறப்பட்ட கறி விருந்தை ருசித்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரத்திற்கும் மேலாக சாவகாசமாக நடந்து வந்து ஓட்டுநர் பேருந்தை எடுத்துச் சென்றுள்ளார். சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
