தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் ஒரு மசோதாவை தவிர மற்ற மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஊரமைப்பு சட்டத் திருத்த மசோதா, தீயணைப்புத் துறை சட்டத் திருத்த மசோதா, சம்பளம் வழங்கல் சட்ட திருத்த மசோதா ஆகிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஊராட்சிகள் சட்ட 2-ம் திருத்த மசோதா, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் ஒப்புதல் பெற்ற 12 மசோதாக்களும் சட்டங்களாகி கடந்த 15ஆம் தேதி தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம் தொடர்பான மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
