சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் கடந்த வாரங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வானிலை மையமும் தமிழகத்தில் மெல்ல அதாவது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என்றே தெரிவித்திருந்தனர்.
அதற்கேற்ப வெப்பம் அதிகரித்ததால் மதிய நேரங்களில் அசௌகரியமான சூழல் இருந்து வந்தது. இருப்பினும் மாலை நேரங்களில் வெயில் தனித்து ஆங்காங்கே மழை பெய்து வந்தது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பகல் முழுவதும் வெயில், இரவு நேரங்களில் மிதமான மழை என்கிற சூழல் தான் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் வரயில் வெயில் கொளுத்தியது.
ஆனால் பிற்பகலுக்கு மேல் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. அத்துடன் மாலை நேரங்களில் கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சுற்றுப்பகுதிகளில் மழை பெய்தது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் மழை பெய்தது. இரவு 9.30 மணிக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்யத்தொடங்கிய மழை சில இடங்களில் நள்ளிரவுக்கு மேலும் நீடித்தது.
சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கே.கே.நகர், சேத்துப்பட்டு, வடபழனி, தி,நகர், அசோக்பில்லர், சூளைமேடு, மாதவரம், புழல், மூலக்கடை , பெரம்பூர் மற்றும் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், பட்டாபிராம், பூந்தமல்லி, செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.