இந்திய மக்களின் ஒற்றுமையால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மேலும், பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு, 20-வது தவணைத் தொகையாக, தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், 20 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவித்தார்.
பின்னர் மேடையில் பேசிய பிரதமர் மோடி, சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, தான் காசிக்கு வருவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.
நமது மகள்களின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்குப் பழிவாங்குவதாகத் தான் சபதம் செய்திருந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதை மகாதேவரின் ஆசீர்வாதத்துடன் நிறைவேற்றியதாகத் தெரிவித்தார்.
மேலும், சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை மகாதேவரின் பாதங்களில் அர்ப்பணிப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து, பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இந்தியா அழித்ததைக் காங்கிரஸாலும், அவர்களின் நண்பர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூரையும், நமது வீரர்களின் வலிமை பற்றியும் காங்கிரஸால் எப்படி கேள்வி எழுப்ப முடிகிறது என்று வேதனை தெரிவித்தார்.
மேலும், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்ததாகப் பெருமிதம் தெரிவித்தார்.