இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலகத் துறைகள், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், சில அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களும், அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்களும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு ஊழியர்களில் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றால், அவர்கள் விடுப்பு எடுத்ததாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியம் பெறுபவர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதியில்லை என்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
