பாஜகவை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும். தேர்தல் நேர கூட்டணி வேறு கட்சியின் கொள்கைகளும் சித்தாந்தங்களும் வேறு என அதிமுகவை சேர்ந்த நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா அம்பத்தூரில் உள்ள தரியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 78வது பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய நிர்மலா பெரியசாமி , “சிறுபான்மையினரை காப்பாற்றி விடுவோம் கிறிஸ்தவ முஸ்லிம்களை காப்பாற்றி விடுவோம் என நிறைய பேர் ஏமாற்றுகிறார்கள். பாஜகவை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும்.தேர்தல் நேர கூட்டணி வேறு கொள்கைகளும் சித்தாந்தங்களும் வேறு, கட்டிய மனைவியை காப்பாற்ற வக்கு இல்லாதவர், மகனையும் மகளையும் தன்னைப் போலவே திரிய விட்டவர் எல்லாம் மகளிரை காப்பாற்றுவேன் என வருகிறார். நம்மிடையே கூட வரலாம் நான் தான் கவனமாக இருக்க வேண்டும்.
தான் செய்வது தவறு என்று தெரிந்திருந்தால் மேடையில் விஜய் அப்படி பேசி இருக்க மாட்டார். வெளியில் கூட வந்திருக்க மாட்டார். மகளிர் தின நிகழ்ச்சியில் முன் வரிசையில் உட்கார்ந்து இருந்த தவெக நிர்வாகிகளின் முகம் பரிதாபமாக இருந்தது.
முன்பெல்லாம் ஒவ்வொரு தவெக நிர்வாகி முகத்திலும் அமைச்சராகி தனி இலக்காவில் செயல்படுவது போல செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். விஜய் நடந்து கொண்டதை பார்த்த பிறகு தான், நிர்வாகிகளுக்கு பயம் வந்துவிட்டது” என கூறினார்.
