ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள பந்தர் அப்பாஸ் நகரின் விமான நிலையம் பகுதியில், இன்று அதிகாலை அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலால் ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இத்தாக்குதலில் ஈரானின் 4 தாக்குதல் டிரோன்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டு விறுவிறுப்பான சூழல் உருவானது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே அமெரிக்காவின் முக்கிய ராணுவ விமான தளம் ஒன்றை இலக்கு வைத்துத் தங்களது இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதிரவைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா மீண்டும் ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதைவிட மிகக் கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கடற்படை எச்சரித்துள்ளதுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கடக்க முயன்ற அமெரிக்கா தொடர்புடைய 5 சர்வதேச எண்ணெய் கப்பல்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கிடையே, ஹார்முஸ் சர்வதேச கடல்வழிப் பாதையை எந்தவொரு தனி நாடும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று அதிபர் டிரம்ப் தனது அமைச்சரவைக் கூட்டத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
