கவியரசர் பாரதியார்

Estimated read time 0 min read

Web team

IMG_20240202_145305.jpg

மகாகவி பாரதியார் நினைவு நாள் 12.9.2024

மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி !

எட்டையபுரத்தில் பிறந்து
எட்டாத உயரம் எட்டியவன்
பாரதி !

சிட்டுக்குருவிகளின் நேசன்
சின்னச்சாமியின் செல்ல மகன்
பாரதி !

முறுக்கு மீசைக்காரன்
முத்தமிழுக்குச் சொந்தக்காரன்
பாரதி !

செந்தமிழ் அன்னையின் புதல்வன்
செல்லம்மாளின் அன்புக் கணவன்
பாரதி !

பரங்கியர் பாரதம் விட்டு
அகலக் காரணமானவன்
பாரதி !

பாரதம் சிறக்க பா பல பாடி
பா ரதம் செலுத்தியவன்
பாரதி !

அச்சம் அறியாதவன்
உச்சம் அடைந்தவன்
பாரதி !

பன்மொழி அறிஞன்
பண் இசைப் பாடல் யாத்தவன்
பாரதி !

மற்ற மொழிகள் அறிந்திருந்தும்
மட்டற்ற தமிழை நேசித்தவன்
பாரதி !

கவிதை நாயகி கண்ணம்மாவை
கண் முன்னே கொண்டு வந்தவன்
பாரதி !

பள்ளியாசிரியராக இருந்தவன்
பள்ளியின் பாடநூலில் இடம் பெற்றவன்
பாரதி !

இயற்கையை ரசித்தவன்
இன்பக்கவி தந்தவன்
பாரதி !

பாப்பா பாடல் பாடியவன்
பாப்பாக்கள் உள்ளம் நிறைந்தவன்
பாரதி !

காலத்தால் அழியாத கவிதைகள்
கல்வெட்டாக பதித்தவன்
பாரதி !

பெண்ணுரிமை பாடியவன்
பேதமையைச் சாடியவன்
பாரதி !

மூடநம்பிக்கைகளை வெறுத்தவன்
பகுத்தறிவைப் பயன்படுத்தியவன்
பாரதி !

உடலால் மறைந்திட்ட போதும்
பாடலால் என்றும் வாழ்பவன்
பாரதி !

.
மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி

எழுதியபடி வாழ்ந்தவன்
வாழ்ந்தபடி எழுதியவன்
மகாகவி பாரதி !

புதுமைக்கும் மரபுக்கும்
பாலம் அமைத்தவன்
மகாகவி பாரதி !

விடுதலை விதையை
விருட்சமாக வளர்த்தவன்
மகாகவி பாரதி !

மற்றவரை மதித்தவன்
சுயமரியாதை மிக்கவன்
மகாகவி பாரதி !

வறுமையிலும் செம்மை
ஏழ்மையிலும் நேர்மை
மகாகவி பாரதி !

பா ரதம் செலுத்திய
பாக்களின் சாரதி
மகாகவி பாரதி !

பெண் விடுதலைக்கு
போர்முரசு கொட்டியவன்
மகாகவி பாரதி !

வாழ்வில் ஆசைப்பட்டவன்
பேராசைப்படாதவன்
மகாகவி பாரதி !

மூடப் பழக்கங்களுக்கு
மூடு விழா நடத்தியவன்
மகாகவி பாரதி !

பகுத்தறிவைப் பயன்படுத்தி
பாடல்கள் புனைந்தவன்
மகாகவி பாரதி !

அழியாத பாடல்கள்
அகிலத்திற்கு வழங்கியவன்
மகாகவி பாரதி !

வெள்ளையர்களை விரட்டிய
காரணிகளில் ஒன்றானவன்
மகாகவி பாரதி !

வாழ்ந்த காலம் முப்பத்தொன்பது
பாடல்களின் காலம் பல நூற்றாண்டு
மகாகவி பாரதி !

மொழிகள் பல பயின்றவன்
தமிழே சிறப்பு அறிவித்தவன்
மகாகவி பாரதி !

.
மகாகவி பாரதி கண்ட விடுதலை ! கவிஞர் இரா .இரவி !

அடையும் முன்பே அடைந்து விட்டோம் என்று !
அன்றே ஆனந்த கூத்தாடியவன் பாரதி !

இன்று இங்கு இருந்திருந்தால் பாரதி !
ஏன் ? பெற்றோம் என்று நொந்து இருப்பான் !

வெள்ளையனே வெளியேறு என்றான் அவன் !
வெள்ளையனே கொளையடிக்க வருக ! என்றானது !

பன்னாட்டு நிறுவனங்கள் வேண்டாம் என்றான் அன்று !
பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளைகள் இன்று !

குடிக்கும் தண்ணீர் பொதுவாக இருந்தது அன்று !
குடிக்கும் தண்ணீர் விலைக்கு விற்கின்றனர் இன்று !

மலைகளை ரசித்துப் பாடல் பாடினான் அன்று !
மலைகளை வெட்டி பல நாடுகள் கடத்தினர் இன்று !

சிட்டுக் குருவிகளுக்கு அரிசியிட்டு மகிழ்ந்தான் அன்று !
சிட்டுக் குருவிகளைக் கூண்டோடு ஒழித்தனர் இன்று !

ஆறுகளையும் மணல்களையும் பாடினான் அன்று !
ஆறுகளையும் மணல்களையும் காணவில்லை இன்று !

பெண் விடுதலை வேண்டும் உரக்கப் பாடினாய் அன்று !
பெண் உயிர் எடுத்து விடுதலை தருகின்றனர் இன்று !

அடிமை விலங்கை அடித்து நொறுக்கினான் அன்று !
அடிமை விலங்கை வாங்கிப் பூட்டினர் இன்று !

காக்கை குருவி எங்கள் சாதி என்றான் அன்று !
காக்கை போல தமிழரைச் சுடுகிறான் இன்று !

சேதுவை மேடாக்கி பாலம் கட்டப் பாடினான் அன்று !
சேது கடல் திட்டத்தையே கை கழுவினர் இன்று !

தமிழ்மொழி இனிய மொழி என்றான் அன்று !
தமிழ்க்கொலை நடக்கிறது ஊடகத்தில் இன்று !

உயிருக்கு மேலாக தமிழை நேசித்தான் அன்று !
உயிர்கள் போனது ஈழத்தில் தமிழால் இன்று !

இந்தியாவை இந்தியர் ஆள விரும்பினான் அன்று !
இந்தியாவை வல்லரசுகள் ஆள்கின்றனர் இன்று !

இந்தியாவே முடிவுகள் எடுக்க விரும்பினான் அன்று !
இந்திய அமைச்சரை அமெரிக்கா முடிவு செய்கிறது இன்று !

காணி நிலம் வேண்டும் என்று பாடினான் அன்று !
காணி நிலம் எங்கும் கெயில் குழாய் பதிக்கின்றனர் இன்று !
.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை என்றான் அன்று !
உழவும் தொழிலும் சிதைந்து வழக்கொழிந்தது இன்று !

பஞ்சம் பட்டினி ஒழிய வேண்டும் என்றான் அன்று !
பஞ்சம் பட்டினி தலை விரித்து ஆடுகின்றது இன்று !

அச்சமில்லை அச்சமில்லை என்று பாடினான் அன்று !
அச்சமின்றி யாருமில்லை என்றானது இன்று !

புதிய ஆத்திச்சூடி பாடி புத்துணர்வு தந்தான் அன்று !
புதிய தலைமுறை ஆத்திச்சூடி அறியவில்லை இன்று !

திருவள்ளுவரை உலகிற்கு தந்த தமிழ்நாடு என்றான் அன்று !
திருக்குறளை தேசிய நூலாக்க மறுக்கின்றனர் இன்று !

கவிதை எழுதியபடி கவிதையாகவே வாழ்ந்தான் அன்று !
கவிதை எழுதுவோர் எழுதியபடி வாழவில்லை இன்று !

அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டினாய் அன்று !
அன்பு என்றால் என்னவென்றுதெரியவில்லை இன்று !
மகாகவி பாரதி கண்ட விடுதலை இது இல்லை !
மகாகவி பாரதி இருந்தால் நொந்து இருப்பான் உண்மை !

Please follow and like us:

You May Also Like

More From Author