தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்து ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கள ஆய்வு பணியில் ஈடுபட்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபடுகிறார். இதற்காக 15ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமானநிலையம் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து சாலை வழியாக தஞ்சாவூர் மாவட்டம் செல்கிறார். அங்கு கல்லணையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்.15ம் தேதி மாலை தஞ்சாவூரில் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார். அப்போது அங்கு ரோடு ஷோ நிகழ்சியில் கலந்துகொள்கிறார். அன்று இரவு தஞ்சாவூரில் சுற்றுலா மாளிகையில் தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16ம் தேதி காலை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் இல்ல திருமண நிகழ்சியில் கலந்து கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து தஞ்சை சரபோஜி மன்னர் அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சியில் கலந்துகொண்டு ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்டா உதவிகளை வழங்கி புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 16ம் தேதி மாலை திருச்சியிலிருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.