வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அனுபவம் வாய்ந்த ஹர்மன்பிரீத் கவுர் அணியை வழிநடத்த, ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி இந்திய அணியில் அதிரடி பேட்டர்கள் மற்றும் திறமையான பந்துவீச்சாளர்கள் சரிவிகிதத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியின் விவரம் பின்வருமாறு,
கேப்டன்: ஹர்மன்பிரீத் கவுர் துணை கேப்டன்: ஸ்மிருதி மந்தனா வீராங்கனைகள்: ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பாரதி ஃபுல்மாலி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீசரணி, யஸ்திகா பாட்டியா, நந்தினி, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், கிராந்தி கெளட், ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ராதா யாதவ்.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி பலம் சேர்க்கிறது. நடுத்தர வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் ஜெமிமா ஆகியோர் தூண்களாக விளங்குவர். ஆல்-ரவுண்டர் வரிசையில் தீப்தி சர்மா மற்றும் இளம் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் ரேணுகா சிங் மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோர் இங்கிலாந்து ஆடுகளங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். கடந்த சில தொடர்களாக இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்து மண்ணில் நிலவும் சூழலுக்கு ஏற்ப சுழற்பந்து வீச்சாளர்களுடன் தகுந்த வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற்றுள்ளது கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த முறை உலகக் கோப்பையை வென்று இந்திய மகளிர் அணி வரலாற்றுச் சாதனை படைக்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணி சில பயிற்சி ஆட்டங்களில் விளையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
