ஆட்சி அமைக்க யாரை அழைப்பது சரி? – துரை வைகோ

Estimated read time 1 min read

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டிருக்கும் சூழலில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Image

இதுதொடர்பாக துரைவைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். தலை வணங்கி ஏற்கிறோம்.

ஆனால் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கு வழி வகுத்து விட்டது என்ற கவலையும் அடைகிறோம். ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தல்களில் மிகத் தெளிவான தீர்ப்பை இதுவரை வழங்கி இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் இது போன்ற ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிற மரபை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். 1983-இல் மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் , ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை பரிந்துரைத்துள்ளது. பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் (Hung Assembly) ஆளுநர் கீழ்க்கண்ட வரிசைப்படி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் .

1.தேர்தலுக்கு முந்தைய கூட்டணி (Pre-poll Alliance): தேர்தலில் போட்டியிடும்போதே கூட்டணி அமைத்து, அதிக இடங்களைப் பெற்று, அந்த கூட்டணியின் தலைவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினால், ஆளுநர் அவரை அழைக்க வேண்டும்.

2.தனிப்பெரும் கட்சி (Single Largest Party): தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை என்றால், அதிக இடங்களைப் பெற்ற தனிக் கட்சியின் தலைவரை ஆளுநர் அழைக்கலாம்.

3.தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி (Post-poll Coalition – Type 1): தேர்தலுக்குப் பிறகு, கட்சிகள் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினால் அவர்களை அழைக்கலாம்.

4.தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி (Post-poll Coalition – Type 2): சில கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்து, பிற கட்சிகள் அல்லது சுயேச்சைகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகக் கூறினால், அந்த கூட்டணித் தலைவரை அழைக்கலாம்.

ஆளுநர் நியமிக்கும் முதல்வர், சட்டப்பேரவையில் (Floor of the House) நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும். ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை சோதிக்கக் கூடாது. இதே போன்ற பரிந்துரைகளையே எம்.எம்.பூஞ்சி கமிஷனும் அளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமைந்த போது மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இரண்டும் சேர்த்து 116 இடங்களைப் பெற்றிருந்தன. ஆனால் அப்போதைய கர்நாடகா ஆளுநர் வாஜூபாய் ரூடாபாய் வாலா, 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜகவை தனிப் பெரும் கட்சியாக அங்கீகரித்து கட்சியின் தலைவர் பி.எஸ். எடியூரப்பா அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதே நிலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டிருக்கும் சூழலில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும். இதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் ஜனநாயகத்திற்கு எதிரானது;

அரசியல் சட்டத்திற்கு புறம்பானது; மாநில உரிமைகளுக்கு எதிரானது; மேலும் தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் தீர்ப்புக்கும் எதிரானது என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author