பைஜூ ரவீந்திரன் ஏற்கனவே பெரும் நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இவருக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
பைஜூஸின் நிறுவனர் பைஜூ ரவீந்திரனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிங்கப்பூர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை பைஜூ ரவீந்திரன் தொடர்ந்து மீறியதே இந்தச் சிறை தண்டனைக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், அவருடைய சொத்துக்கள் தொடர்பான பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மதிக்காமல் செயல்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சட்ட விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட காரணத்திற்காகவே இந்த கடுமையான அவமதிப்பு நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பைஜூ ரவீந்திரன் உடனடியாக அங்குள்ள சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கிற்கான நீதிமன்றச் செலவுத் தொகையான 70,500 டாலரை (சுமார் 58 லட்சம் ரூபாய்) அவர் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நிறுவியதன் மூலம் இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலில் கோடீஸ்வரராகக் கொண்டாடப்பட்ட ரவீந்திரனின் கதை தற்போது முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. தற்போதைய சூழலில் அவர் சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது வேறு எங்கு இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை .
