தமிழகத்தில் ஆசிரியர் பணி விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களைச் செய்து, அதற்கான புதிய அரசிதழை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் (High School Headmaster) மற்றும் முதுகலை ஆசிரியர் (PG Assistant) ஆகிய பதவிகளுக்கான பதவி உயர்வுக்கு (Promotion) இனி ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருந்த ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
மேலும், பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் போது, அதில் 18 சதவீத இடங்கள் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அரசு தனது புதிய விதிமுறையில் தெளிவுபடுத்தியுள்ளது.
கல்வித்துறையில் அடுத்தடுத்து பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் இந்த அரசிதழ் வெளியீடு ஆசிரியர் கூட்டமைப்புகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பதவி உயர்வு நடைமுறைகளை இனி மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
