ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் திரளாக குவிந்து வழிபாடு நடத்தினர்.
அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். இதையொட்டி, ஆடி மாதப் பிறப்பு மற்றும் முதல் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு அம்மன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக குவிந்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
இதேபோன்று, திருச்சி மாவட்டம் உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அதிகாலை கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
மதுரை மாவட்டம், வண்டியூரில் உள்ள மாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்வதற்காக, விடிய விடிய 350 கிலோ பச்சை மஞ்சளை அம்மியில் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பசலிகுட்டை பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து வழிபட்டனர். காவடி எடுத்தும், பால் குடம் ஏந்தி வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
