2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சமீபத்தில் அமித்ஷா சென்னை வந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் மதுரையில் முகாமிட்டு தமிழக பா.ஜ.க தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக பா.ஜ.க. உயர்மட்ட உறுப்பினர்களுடன் அவர் பேசும்போது, ஒவ்வொரு மாதமும் நான் தமிழகம் வருவேன்” என்று கூறியிருந்தார்.
அதன்படி மத்திய அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி தமிழகம் வருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது பா.ஜ.கவை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலுப்படுத்துவதற்கான ஆய்வுகளை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி வாரியான ஆய்வு பணிகளையும் அமித்ஷா மேற்கொள்ள இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை 8-ந்தேதி தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களையும் அமித்ஷா சந்தித்து பேச இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மதுரையில் நடத்தப்பட்டது போல சென்னையிலும் சில தலைவர்களுடன் அமித்ஷா தனி அறையில் சந்தித்து கருத்துகளை கேட்டறிவார் என்று கூறப்படுகிறது. தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை சந்தித்து அவர் பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.