சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆகஸ்ட் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் பிஜி நாட்டின் தலைமையமைச்சர் சிட்டிவேனி ராபுக்காவைச் சந்தித்து பேசினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், பசிபிக் தீவு நாடுகளிலேயே சீன மக்கள் குடியரசுடன் மிக முன்னதாக தூதாண்மை உறவை நிறுவிய நாடு, பிஜி ஆகும். அடுத்த ஆண்டில், இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆம் ஆண்டுநிறைவு கொண்டாடப்படும்.
கடந்த அரை நூற்றாண்டில், இரு நாடுகளும் எப்போழுதும் ஒன்றுக்கொன்று ஆதரவு மற்றும் உதவி அளித்து வருகின்றன. பெரிய மற்றும் சிறிய நாடுகள் ஒன்றை ஒன்று மதித்து நடப்பதற்கும், நட்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கும், இது முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், சீனாவின் யுன்னான், ஃபூஜியான், ட்செஜியாங் ஆகிய மூன்று மாநிலங்களில் ராபுக்கா இந்த முறை பயணம் மேற்கொண்டார். வறுமை ஒழிப்புத் துறையில் சீனாவின் அனுபவங்களை ஷிச்சின்பிங் ராபுக்காவிடம் அறிமுகம் செய்தார்.
தவிர, பிஜி உள்ளிட்ட பசிபிக் தீவு நாடுகள் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் உதவி அளிக்க சீனா விரும்புகிறது என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.ராபுக்கா கூறுகையில், வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு கட்டுமானம் முதலிய துறைகளில் சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பின் கூட்டு பங்கெடுப்பில் தொடர்ந்து ஒத்துழைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். தவிரவும், பிஜி தொடர்ந்து உறுதியாக ஒரே சீனா எனும் கொள்கையைப் பின்பற்றும் என்று ராபுக்கா வலியுறுத்தினார்.