திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள ஒரு வார்டில் மட்டும் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்டப் பணிக்கு டெண்டர் கோரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கவுன்சிலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மீஞ்சூர் பேரூராட்சியின் 15வது வார்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மனைவி பரிமளா, சுயேட்சையாக வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோரின் பரிந்துரைப்படி 15வது வார்டுக்கு மட்டும் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 17 வார்டு கவுன்சிலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் கூட டெண்டர் கோரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் டெண்டரை ரத்து செய்ய கோரி விசிக கவுன்சிலர் அபுபக்கர் மனு அளித்தார். மேலும், பேரூராட்சி இணை இயக்குநரிடம் திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் டெண்டரை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
தவறும் பட்சத்தில் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.