சேலம் மேட்டூர் அணையை திறந்து வைத்து, அணையிலிருந்து வெளியேறிய நீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி வரவேற்றார்.
காவிரி டெல்டா விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையிலிருந்து போதிய நீர் இருப்பு இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 115 அடியாக இருப்பதால் நீர்வரத்து மற்றும் பருவமழையை எதிர்பார்த்து இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் குறித்த நேரத்தில் திறக்க திட்டமிடப்பட்டது.
இதனையடுத்து மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த முதல்வர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னர் நேற்று மாலை சேலத்திற்கு வந்தடைந்தார்.
இன்று தண்ணீர் திறப்பிற்காக சுற்றுலா மாளிகையில் இருந்து வந்த முதல்வருக்கு சாலையின் இரு புறங்களிலும் நின்ற பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள மின் பொத்தானை அழுத்தி அணையை திறந்து வைத்தார். அணையில் இருந்து வெளியேறிய நீரையும் மலர் தூவி வரவேற்றார். முதல் கட்டமாக 3,000 கன அடி தண்ணீரும் , அதனைத் தொடர்ந்து 6000 கனஅடி, நீர் 8000 கன அடி நீர் பின்னர் இரவு நேரங்களில் 12 ஆயிரம் கன அடி நீர் என நீர் திறப்பு உயர்த்தப்பட உள்ளது. இந்த தண்ணீரானது மூன்று நாட்களில் கல்லணையை சென்றடையும் என்று கூறப்படுகிறது.
இந்த நீரினால், தஞ்சாவூர், நாகப்பட்டணம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மேலும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.