சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து அவர் போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, போலீஸ் விசாரித்ததில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் விசாரித்து வந்தது. முதலில் விசாரணையின் போது, போதைப் பொருள் பயன்படுத்தியதை நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், நடிகர் ஸ்ரீகாந்துக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்படி, ரத்த பரிசோதனையில் ஸ்ரீகாந்த் கோக்கைன் பயன்படுத்தியது உறுதியானது. இதனையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து விசாரிக்க அழைத்த சென்றனர். அப்போது, அவரை சுற்றி வளைத்த செய்தியாளர்கள் வீடியோ எடுக்க முயற்சி செய்ததால், நியூஸ் பேப்பரால் தனது முகத்தை மறைத்துக் கொண்டு கதறி அழுதார்.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருப்பதும், விசாரணை வளையத்திற்குள் நடிகர் கிருஷ்ணா சிக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்.., இந்த வழக்கில் மேலும் சில திரையுலக பிரபலங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால், நடிகர் ஸ்ரீகாந்துடன் சேர்ந்து கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்திய நடிகர்கள் யார் யார்? என்கிற பட்டியலை காவல்துறை எடுக்கிறதாம். ஸ்ரீகாந்த் எத்தனை ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்படுத்தி வருகிறார்? யார் மூலம் எல்லாம் போதைப்பொருள் வாங்கி உள்ளார்? சென்னையில் எந்தெந்த பப்,பார்ட்டிகளில் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளார்? என போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.