புவிசார் அரசியலில் மாற்றம் : மத்திய கிழக்கில் புது உலகம் – தனிமைப்படுத்தப்பட்ட ஈரான்!

Estimated read time 1 min read

இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் 12 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்,ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ஆப்ரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கையின் நோக்கத்தை அடைந்து விட்டதாகவும் கூறியுள்ளது. இஸ்ரேல்- ஈரான் போர் மத்திய கிழக்கின் புவிசார் அரசியலின் நிலைக் களத்தையே தலைகீழாக மாற்றி உள்ளது. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.

இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்ட நாள் முதலாக ஈரான், தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த முயற்சி செய்து வந்தது. அதன் அடிப்படையில், ஹமாஸ், ஹிஸ்புல்லா,ஹவுதி என பல்வேறு இராணுவ குழுக்களை உருவாக்கி, மத்திய கிழக்கில் தன்னை ஒரு வலிமைமிக்க நாடாக நிலைநிறுத்திக் கொண்டது ஈரான்.

இதன் அடுத்த கட்டமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஈரானின் அணுசக்தி திட்டம் தனது இருப்புக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் நினைத்தது. மத்திய கிழக்கில் அதிக இராணுவத் தளங்களை வைத்துள்ள அமெரிக்காவும் ஈரான் அணுசக்தி நாடாக மாறுவதை விரும்பவில்லை.

இந்நிலையில்,பத்து ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எடுத்த முயற்சியின் விளைவாக, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் ஏற்பட ரஷ்யாவும் ஒரு பங்கு வகித்தது. இதன் மூலம் ஈரானின் அணுசக்தி திட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

2016 ஆம் ஆண்டில், முதல்முறையாக அமெரிக்க அதிபரான ட்ரம்ப், 2018 ஆம் ஆண்டு, அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அணுசக்தி தயாரிப்புக்குத் தேவையான யூரேனியத்தைச் செறிவூட்டும் பணிகளைத் தீவிரப்படுத்தியது ஈரான்.

இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அதன் பிறகு, புதுப்பிக்கப் பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்றும், இல்லையென்றால் கடுமையான விளைவுகளை ஈரான் சந்திக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த இஸ்ரேல்- ஈரான் மோதலை இவ்வளவு தூரம் பெரிய போராகக் கொண்டுவந்து விட்ட பெருமை ஹமாஸ் பயங்கரவாதி யாஹ்யா சின்வாரையே சேரும்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் பலியானார்கள். மேலும் 250க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் சிறைபிடித்துச் சென்றனர்.

இதனையடுத்து, ஈரானின் ஆதரவில் செயல்படும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மீது கடுமையான இராணுவ நடவடிக்கை எடுத்த இஸ்ரேல், அந்த அமைப்புக்களை ஒட்டுமொத்தமாக அழித்தது. இதன் விளைவாக சிரியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளான, கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. இதற்கிடையே அமெரிக்கா முன்வைத்த புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஈரான் மறுத்தது. தொடர்ந்து, கடந்த ஜூன் 13 ஆம் தேதி,ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

21 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குக் கூட்டாகக் கண்டன அறிக்கை வெளியிட்ட போதிலும் அஜர்பைஜான் மட்டும் அதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில், பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட ஜி 7 நாட்டுத் தலைவர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

ஈரானின் அணுசக்தி கோட்டை என்று கூறப்படும் பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் அமைந்துள்ள FORDOW அணுசக்தி தளத்தை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டுகள் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி ஈரானின் அணுசக்தி தளங்களைத் தாக்க, இஸ்ரேல் வலியுறுத்தியது.

உலகமே எதிர்பார்க்காத நிலையில், இஸ்ரேலின் வேண்டுகோளை ஏற்று, அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பி-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 125க்கும் மேற்பட்ட அதிநவீன விமானங்களால் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமெனி, ரஷ்ய அதிபர் புதினிடம் இராணுவ உதவி கேட்டு, வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மூலம் கடிதமும் கொடுத்து அனுப்பினார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்குவது தொடர்பாகக் கடந்த ஜனவரியில் இருநாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தில் பரஸ்பர பாதுகாப்பு உறுதி இல்லை என்பதால் ரஷ்யா, ஈரானுக்கு உதவாது என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் கிட்டத்தட்ட ரஷ்ய மொழி பேசும் நாடாகவே உள்ளது என்றும், சோவியத் யூனியன் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இஸ்ரேலில் வாழ்கிறார்கள் என்றும் கூறியுள்ள புதின், இதன் மூலம் ஈரானுக்கு ரஷ்யாவின் ஆதரவு இல்லை என்பதைச் சாமர்த்தியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஏற்கெனவே அமெரிக்காவுடன் வர்த்தக போரில் இருக்கும் சீனாவும் ஈரானுக்கு உதவ முன்வரவில்லை. நாட்டின் 90 சதவீத எண்ணெய்யை ஈரானில் இருந்து இறக்குமதி செய்த போதும் சீனா ஈரானை விட்டு விலகி நிற்கிறது. அதனால் தான் அமெரிக்கத் தாக்குதலுக்குச் சம்பிரதாயமாக இருநாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் ஈரான் சேர்ந்தது என்றாலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் எதுவும் ஈரானுக்கு ஆதரவாக இல்லை என்பதே உண்மை. ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேல்- ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கின்றன.

DEATH TO AMERICA மற்றும் DEATH TO ISRAEL என்ற கொள்கையுடன் உள்ள ஈரான் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது.சர்வதேச அளவில் தன் செல்வாக்கையும்,மத்திய கிழக்கில் தன் இருப்பையும் இழந்து நிற்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author