தமிழக அரசின் தடையை மீறி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றிய எரிசக்தி இயக்குனரகம் ஷேல் எரிவாயு, ஷேல் எண்ணெய் எடுக்க திருவாருர், பெரியகுடி, அன்னவாசநல்லூர் ஆகிய 3 பகுதிகளிலும் ஓஎன்ஜிசி மூலம் கிணறுகள் தோண்டியுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமிழக அரசு உடனடியாக ஒரு குழுவை அமைத்து 3 இடங்களிலும் ஆய்வு செய்து, பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழக காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் தடையை மீறி ஒன்றிய அரசின் எரிசக்தி துறை, திருவாரூர், பெரிய குடி, அன்னவாசநல்லூர் ஆகிய 3 இடங்களிலும் ஷேல் எரிவாயு, ஷேல் எண்ணெய் எடுக்க ஒஎன்ஜிசி க்கு பணித்துள்ளது அப்பகுதியில் ஒஎன்ஜிசி கிணறுகள் தோண்டியுள்ளது. தமிழக அரசு அந்த பணிகளை தடுத்து நிறுத்த வல்லுநர் குழுவை அமைத்து அந்த 3 இடங்களிலும் ஆய்வு செய்து ஷேல் எடுக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். மன்னார்குடியிலும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியிலும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தையும் முற்றிலும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றார்