உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசு கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுத்துள்ள நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே, பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களையும் 2025 ஏப்ரல் 28-க்குள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், சாலையின் தார் பரப்பிலோ, சென்டர் மீடியன் பகுதிகளிலோ கொடிக் கம்பங்களை அமைக்கக் கூடாது, மேலும், மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது போன்ற கடுமையான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரசாரம், தேர்தல் நிகழ்வுகள், தர்ணா அல்லது பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நிகழ்வுக்காகவும் தற்காலிகக் கொடிகள், கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைப்பதற்கு மாநகராட்சியின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதியின்றி நடப்படும் தற்காலிகக் கொடிக்கம்பங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக அகற்றப்படும் என்றும் மாநகராட்சி கண்டிப்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது, சென்னையில் விதிமீறிக் கொடிக்கம்பங்கள் வைக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
