
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 8,27,475 மாணவ, மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர்.
மாணவர்களின் உயர்கல்விக்கு மிக முக்கியமாகக் கருதப்படும் கணிதம், உயிரியல், வணிகவியல் மற்றும் நுண் உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளன.
இதனைத் தொடர்ந்து, வரும் மார்ச் 23 (திங்கட்கிழமை) மற்றும் மார்ச் 26 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன.மார்ச் 26-ஆம் தேதியுடன் இந்த ஆண்டிற்கான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அனைத்தும் நிறைவடைகின்றன.
அதனைத் தொடர்ந்து, பொதுத்தேர்வு விடைத்தாள்கள் வரும் 28-ந்தேதி மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளன. பின்னர், அங்கிருந்து விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு ஏப்ரல் 4-ந்தேதி அனுப்பிவைக்கப்படுகின்றன.
முதன்மை தேர்வாளர்கள் ஏப்ரல் 8-ந்தேதி விடைத்தாள்களை மதிப்பீடு செய்வார்கள். உதவி தேர்வாளர்கள், ஏப்ரல் 9-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
