கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியதை அடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டுவென்டி-20 கட்சி அண்மையில் இணைந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட இந்தக் கட்சிக்கு இந்த முறை பாரதிய ஜனதா கூட்டணியில் இருபது தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் டுவென்டி-20 கட்சியின் நான்காவது வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் சாபு ஜேக்கப் கொச்சியில் வெளியிட்டார். இதில் அங்கமாலி மற்றும் திருப்புனித்துரா உள்ளிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாவூர் தொகுதியில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகை லட்சுமி பிரியா போட்டியிடுகிறார்.
திருப்புனித்துரா தொகுதியில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி நாயர் களம் இறங்குகிறார். அதேபோல் ஏட்டுமானூர் தொகுதியில் நடிகையும் நடனக் கலைஞருமான வீணா நாயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அங்கமாலி தொகுதியில் வணிக மேலாண்மை ஆலோசகரான பிரோமி குரியாகோஸ் போட்டியிடுகிறார். இது தவிரத் திருக்காக்கரா தொகுதியில் பிரபல திரைப்பட இயக்குநர் அகில் மாரர் மற்றும் திருவம்பாடி தொகுதியில் சன்னி தாமஸ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். குன்னத்துநாடு தொகுதியில் பாபு திவாகரனும் திருக்கரிப்பூர் தொகுதியில் ரவி குளங்கராவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டுவென்டி-20 கட்சி இதுவரை பன்னிரண்டு தொகுதிகளுக்குத் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
