தமிழக அரசியல் களமே உற்று நோக்கி வரும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், 9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அசைக்க முடியாத முன்னிலை பெற்றுள்ளார்.
அவர் 52,386 வாக்குகளைப் பெற்று, தனது கோட்டையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட இபிஎஸ் தற்போது 31,932 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய முன்னிலை பெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலின் மிகப்பெரிய ஆச்சரியமாக, திமுக வேட்பாளர் காசியை (14,420 வாக்குகள்) பின்னுக்குத் தள்ளி, ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) தலைவர் விஜய் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமார் 20,454 வாக்குகளுடன் அதிரடியாக 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். தவெக-வின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகியான பிரேம்குமாருக்கு ‘டெலிவிஷன்’ சின்னத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
தற்போது அவர் ஆளும் திமுக-வையே ஓவர்டேக் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் பிரியதர்சினி 3,479 வாக்குகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். எடப்பாடியில் இபிஎஸ்-ன் வெற்றி உறுதியாகத் தெரிந்தாலும், விஜய் ஆதரவு வேட்பாளர் பெற்று வரும் வாக்குகள் திராவிட கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.
