தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின்..!!

Estimated read time 0 min read

தவெக தலைவர் விஜய், நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை அவர் வழங்கிய போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை நிரூபிக்க கூடுதல் ஆதரவு தேவை என்பதால் ஆளுநர் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. இந்த அரசியல் நகர்வுகளால் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான சூழல் நிலவி வரும் வேளையில், அடுத்தகட்டமாக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் முயற்சியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஆளுநர் அழைப்பு விடுக்காததால் விஜய் முதல்வராக பொறுப்பேற்கும் நிகழ்வு தள்ளிப்போகிறது. முன்னதாக இன்றைய தினம் பதவியேற்புக்கான நிகழ்வுகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆளுநரின் தொடர் மௌனத்தால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது. முதல் ஆறு மாதங்களுக்கு தவெகவின் நடவடிக்கைகளை அமைதியாக கண்காணிப்போம்.

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதாக தவெக தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அதனை நடைமுறைப்படுத்துவது கடினம். ஆகையால் மாதம் ரூ.1000 வழங்குவதை தவெக தொடர வேண்டும். ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்குவதாக தவெக தெரிவித்துள்ளது. அதனையும் செயல்படுத்தினால் மகிழ்ச்சி தான். மேலும் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பயனுள்ள திட்டங்களை தவெக தொடரவேண்டுமென” குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author