திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் மோசடி – அறநிலையத்துறை பெண் ஊழியர் சஸ்பெண்ட்!

Estimated read time 0 min read

திருச்செந்தூர் முருகன் கோவிலில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த அறநிலையத்துறை பெண் ஊழியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண வரிசை, முதியோருக்கான வரிசை என, மூன்று வகையில் முருகனை தரிசனம் செய்யலாம். இதில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், 25 லட்சத்து, 24,100 ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை நடத்திய கோவில் இணை கமிஷனர் ராமு, முறைகேட்டில் ஈடுபட்ட மேனகா என்ற ஊழியரை சஸ்பெண்ட் செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, திருச்செந்தூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில், 100 ரூபாய் கட்டண சீட்டு விற்பனை நிலையங்களை ஆய்வு செய்தபோது, கம்ப்யூட்டரில் ஐ.டி.எம்.எஸ்., பயனர் உள்ளிட்ட பயன்படுத்தி, ஒருமுறை மட்டும் கட்டண சீட்டு நகல் எடுக்கும் வசதியை தவறாக பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

சிசிடிவி கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், கோவில் பணியாளர் மேனகா, பணியில் இருந்த நேரத்தில் மட்டும் கட்டண சீட்டுகள் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

அவர், 25 லட்சத்து 24,100 ரூபாய் முறைகேடாக கையாடல் செய்துள்ளார். தொடர்ந்து, மேனகா மே 19ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தினசரி கட்டண சீட்டு மூலம் பெறப்படும் அறிக்கைகளை, கம்ப்யூட்டர் வழியாக ஆய்வு செய்யாமலும், கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட கட்டண சீட்டுகளை ஒப்பிட்டு சரி பார்க்காமலும் இருந்ததால், கோவில் பணியாளர்கள் பாலமுருகன் மற்றும் உச்சிமாகாளி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மேனகா இழப்பு தொகையில், 5 லட்சம் ரூபாயை தானாக முன்வந்து தவறை ஒப்புக் கொண்டு செலுத்தியுள்ளார்.

மீதி தொகையை திருப்பி செலுத்துவதாக அவர் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய வகையிலும், கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய வகையிலும், மேனகா மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

போலீஸார், மேனகா மீது வழக்கு பதிந்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author