#JUST IN : 2026 ஆம் ஆண்டுக்கான வி.சி.க. விருதுகள் அறிவிப்பு..!

Estimated read time 1 min read

வி.சி.க. கட்சியின் சார்பில் சமூகம், அரசியல், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றி வரும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘விசிக விருதுகள்’ 2026 ஆம் ஆண்டிற்காக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் இந்திய அளவில் சமூகநீதி, அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் விசிக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழக முன்னாள் முதலமைச்சர் முதல்வர் கலைஞர், தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், மூத்த அரசியல் கட்சித் தலைவர்களான து.ராஜா, குமரி அனந்தன், கே.எஸ். அழகிரி, எழுத்தாளர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார், காசி ஆனந்தன், ஆ.சக்திதாசன், வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட பல்வேறு சான்றோர்களுக்கு விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான

  • “அம்பேத்கர் சுடர்” விருது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.சொக்கலிங்கத்திற்க்கு வழங்கப்படுகிறது.
  • “பெரியார் ஒளி” விருது மனித உரிமைப் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான வழக்கறிஞர் ஹென்றி டிஃபேனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • “மார்க்ஸ் மாமணி” விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனுக்கு வழங்கப்படுகிறது.
  • “காமராசர் கதிர்” விருது ஐயா வைகுண்டர் வழியில் சமயச் சீர்திருத்தப் பணியாற்றி வரும் ஐயா பால. பிரஜாபதி அடிகளாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • “அயோத்திதாசர் ஆதவன்” விருது சமூக செயற்பாட்டாளர் ரூத்மனோரமாவுக்கும், “காயிதேமில்லத் பிறை” விருது ஐஎன்டிஜே மாநில துணைத்தலைவர் முகமது முனீருக்கும் வழங்கப்படுகிறது.
  • “செம்மொழி ஞாயிறு” விருது தமிழறிஞர் பொ.வேல்சாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஜூலை 05, 2026 அன்று நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author