தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களது கல்விச் கட்டண விவரங்களைத் தகவல் பலகையில் (Notice Board) தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விச் கட்டண விவரங்களைப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எளிதில் அறியும் வண்ணம் பள்ளித் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும். கட்டண விவரங்கள் தகவல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யும் வகையில், அதனைப் புகைப்படம் எடுத்து அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிக்கு பள்ளிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவத்திலும் வகுப்புவாரியாக வசூலிக்கப்படும் கல்விச் கட்டண விவரங்களைத் தெளிவாக அச்சடித்து வழங்க வேண்டும்.
கல்விக் கட்டண நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
