கேரளாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பல்வேறு பகுதிகளில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மலையடிவாரத்தில் இருந்த வீட்டின் மீது மண் சரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், பலமணி நேரம் போராடி சுமதி என்பவரை சடலமாக கண்டெடுத்தனர். இதே போன்று அதே பகுதியில் நிகழ்ந்த மற்றொரு நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது
இடுக்கி மாவட்டத்தில் பெய்து கனமழை காரணமாக கல்லாறு குட்டி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக அணையின் 5 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு காரணமாக பெரியாறு ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக “பம்பை” ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராணி டவுன் பகுதியில் முழங்கால் அளவுக்குமேல் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டம் ராணி டவுன் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்பு வாசிகளை பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
