உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், கோவிலின் பல்வேறு பகுதிகளில் இருந்து கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பக்தர்களை நேரடியாக அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே, பொதுமக்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகன்ற எல்இடி திரைகள் அமைக்கவும், போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
