மோசமான நிலையில் இருக்கும் அரசு பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு ’ரெட் ஸ்டிக்கர்’ ஒட்டி சீல் வைக்கப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

Estimated read time 1 min read

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொதுப்பணித்துறை சார்பில் செயல்படுத்தப்படவுள்ள கட்டிட பராமரிப்பு பணிகள் குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக புதிய அரசு மற்றும் கல்லூரிகளை கட்ட வேண்டும் என நாம் பேசி வருகிறோம். ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை கட்டிய அரசு பள்ளி கல்லூரிகளில் கட்டிடங்கள் சரியில்லை என்று தெரியவந்துள்ளது.

இது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை கடந்த 30 நாட்களாக ஒரு சென்ட்ரலைஸ்டு டேட்டாவை எடுத்து வருகிறோம். அதன்படி, தமிழ்நாட்டில், 6,279 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பொதுப்பணித்துறை சார்பில் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 177 கலை கல்லூரிகள், 11 பொறியியல் கல்லூரிகள், 55 தொழில்நுட்ப கல்லூரிகள், 98 தொழில் பயிற்சி நிறுவனங்கள் மொத்தமாக 6,620 கல்வி நிறுவனங்ளின் கட்டிடங்கள் சரியில்லை என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் பெண்கள் படிக்கும் நிறைய பள்ளிகளில் கழிப்பறை கிடையாது. குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. புத்தக அளவில் மட்டுமே பள்ளிகளில் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் பராமரிப்பு பிரச்சனை மிகப்பெரிய அளவில் உள்ளது. சென்ட்ரலைஸ்டு டேட்டாவை சேகரிப்பு செய்யும் பணி 40 சதவீதம்தான் முடிவடைந்துள்ளது.

மேலும், தொகுதி வாரியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு பள்ளி, கல்லூரிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து கட்டிடத்தின் தரம் குறித்து எங்களிடம் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி கட்டடங்களின் ஸ்டெபிலிட்டி சான்றை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கட்டடங்களில் தரங்களை கண்டரிந்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டடங்கள் Red, Yellow, Green என 3 பிரிவுகளாக பிரிக்கப்படும். மோசமான நிலையில் இருக்கும் கட்டடங்களுக்கு ரெட் ஸ்டிக்கர் ஒட்டி சீல் வைக்கப்படும். இவ்வாறு சீல் வைக்கப்படும் கட்டிடங்களில் மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும், மஞ்சள் நிற ஸ்டிக்கரை ஒட்டும் கட்டடங்கள் உடனடியாக பராமரிக்க தேவையான கட்டிடங்கள் என வரையறுக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் இருக்கும் கட்டிடங்களுக்கு கிரீன் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

இதற்கு முன்பு இந்த அணுகுமுறை கிடையாது. புது முறையாக பொதுப்பணித்துறையில் இந்த நடவடிக்கை கொண்டு வரப்படுகிறது. தனியார் பள்ளி கல்லூரிகளை போன்று அரசு பள்ளி, கல்லூரிகளின் கட்டிடங்கள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் அரசு கல்வி கருணை அடிப்படையில் இல்லாமல் உரிமை அடிப்படையில் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author