மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘பிரதமமந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2026-27ஆம் கல்வியாண்டில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சிறந்த பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் மாணவர்களில் 30 சதவீத இடங்கள் மாணவிகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
நிதி உதவியைப் பொறுத்தவரை, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை வழங்கப்படுகிறது. அதேபோல, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகையாகக் கிடைக்கிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் OBC, EBC அல்லது DNT பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், அவர்களின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
ஏற்கனவே 2025-26ஆம் ஆண்டில் உதவித்தொகை பெற்ற மாணவர்கள் 2026-27ஆம் ஆண்டிற்கான புதுப்பித்தல் விண்ணப்பத்தை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். புதிய மாணவர்களுக்கான விண்ணப்ப தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தகுதியுள்ள மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
