பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு :– சிறப்பு தொகுப்பு!

Estimated read time 1 min read

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவாக ‘பிரிக்ஸ் புதுடெல்லி பிரகடனத்தைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சர்வதேச அமைப்புகளில் தெற்குலக நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள இந்தப் பிரகடனம் சர்வதேச ஒழுங்கை மாற்றியமைக்கும் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

2009-ல் ஒரு அரசியல் குழுவாக பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை இணைந்து பிரிக் உருவானது. 2011-ல் தென்னாப்பிரிக்கா இணைந்ததும் பிரிக்ஸ் என்று மாற்றம் பெற்றது. 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியைவை பிரிக்ஸ் அமைப்பில் இணைந்தன. 2025-ல் இந்தோனேசியா இணைந்தது.

இந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திலும், பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பங்கேற்ற சவூதி அரேபியா பிரிக்ஸ் உறுப்பினராக சேருவதைத் தவிர்த்து வருகிறது.

விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் அமைப்பு உலக மக்கள் தொகையில் சுமார் 49 சதவீதத்தையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 39 சதவீதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் 23 சதவீதத்தையும் கொண்டுள்ளதாக ரஷ்ய அதிபர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஆசியாவின் முக்கிய உற்பத்தி நாடுகள் முதல் வளைகுடா எரிசக்தி நாடுகள் வரை விரிந்து பிரிக்ஸ் பொருளாதார வீச்சு ஆப்பிரிக்கா வரை பரவியுள்ளது.

எந்தவொரு ஒப்பந்தமோ, நிரந்தரச் செயலகமோ பொதுவான பட்ஜெட்டோ இல்லாத பிரிக்ஸ் அமைப்பில் அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன.

2015-ல் பிரிக்ஸ் அமைப்பால் நிறுவப்பட்ட புதிய மேம்பாட்டு வங்கி, உள்கட்டமைப்பு, நீர், போக்குவரத்து மற்றும் தூய்மையான எரிசக்தி உள்ளிட்ட 139 திட்டங்களுக்கு சுமார் 42.9 பில்லியன் டாலர் நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு வரை இந்தியா மட்டும் $9.53 பில்லியன் மதிப்புள்ள 32 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உலக வங்கி மற்றும் பிற மேற்கத்திய ஆதரவு நிறுவனங்களின் கடன் வழங்கும் திறனுடன் ஒப்பிடும்போது இது சிறியதாக இருந்தாலும், இது ஒரு உண்மையான நிறுவன வெளியீடாகும்.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், அணுசக்தி, உரங்கள், தொழில்துறை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டுவதற்காக புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை உருவாக்குவது குறித்தும் ரஷ்ய அதிபரும் பாரதப் பிரதமரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

2024/25-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான சீன இறக்குமதிகள் 113.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளன, மேலும் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தப் பற்றாக்குறை 99.2 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவைத் தொட்டுள்ளது.

இந்நிலையில் 2020-ல் எல்லையில் கல்வான் பள்ளத் தாக்கில் ஏற்பட்ட இராணுவ மோதலுக்குப் பிறகு சீன அதிபர் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் இருதரப்பு உறவும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா-ரஷ்யா தலைமையில் பிரிக்ஸ் ஒரு அமெரிக்க எதிர்ப்பு அணியாக மாறுவதை விரும்பாத இந்தியா,

குவாட், ஜி20, மற்றும் ஐரோப்பா அமெரிக்காவுடனான இருதரப்பு கூட்டாண்மையுடன் பிரிக்ஸ் அமைப்பை உறுப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான கருவியாகவே பயன்படுத்த முயற்சி செய்கிறது.

மேலும், உறுப்பு நாடுகளின் தேசிய நாணயங்களில் அதிக வர்த்தகத்தை மேற்கொள்வது, பணம் செலுத்தும் முறைகளை இணைப்பது மற்றும் இறுதியில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களுக்கு இடையேயான இயங்குதிறனை மேம்படுத்துவது போன்ற புதிய வழி முறைகளை நோக்கி பிரிக்ஸை இந்தியா நகர்த்தியுள்ளது.

சொல்லப்போனால் அமெரிக்காவின் அழுத்தம், இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய பெரும் நாடுகளை ஒருங்கிணைந்து செல்லப்பட வைத்துள்ளது. மற்ற பிரிக்ஸ் நாடுகளும் அமெரிக்காவை எதிர்க்காமல் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுகின்றன.

இந்தியா தலைமையில் நடந்த 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 அம்ச கூட்டுப் பிரகடனத்தைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இது இந்தியாவின் பிரிக்ஸ் ராஜதந்திரமாகும். சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஒரு மாற்று அணியை உருவாக்குவது என்றில்லாமல் உலக தெற்கு நாடுகளின் உரிமைக்காக இந்தியா குரல் கொடுத்துள்ளது.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யத் தலைவர்கள் கைகுலுக்கி ஒன்றாக நிற்கும் காட்சி மீண்டும் சர்வதேச அளவில் மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

You May Also Like

More From Author