சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அல்ஜீரிய அரசுத் தலைவர் அப்துல்மஜித் டெபோனுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜுலை 18ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீன-அல்ஜீரிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவாகும். அல்ஜீரியாவுடன் இணைந்து பாடுபட்டு, பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் சென்று, இருநாடுகளின் விரிவான நெடுநோக்கு கூட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், இருநாடுகள் தத்தமது மைய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்க வேண்டும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்பு ஆவணங்களை இருதரப்பும் சீராக நடைமுறைப்படுத்தி, பாரம்பரிய துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்கவும், உயர் தொழில் நுட்ப துறைகளிலான ஒத்துழைப்புகளை விரிவாக்கவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதோடு, அல்ஜீரியாவுடன் இணைந்து, புதிய யுகத்துக்கான சீன-ஆப்பிரிக்க பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
டெபோன் கூறுகையில், அல்ஜீரியாவின் மிக முக்கிய நண்பர் மற்றும் கூட்டாளியாக சீனா திகழ்கிறது. நீண்டகாலமாக அல்ஜீரியாவுக்கு பல்வகை அரிதான ஆதரவுகளை வழங்கி வருகின்ற சீனாவுக்கு நன்றி. சீனாவின் மைய நலன்களுடன் தொடர்புடைய தைவான், சின்ஜியாங் உள்ளிட்ட பிரச்சினைகளில் சீனாவின் நிலைப்பாட்டை அல்ஜீரியா உறுதியுடன் ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வேளாண்மை, போக்குவரத்து, அறிவியல் தொழில் நுட்பம், நகரப்புற தொடர்வல்ல வளர்ச்சி, வர்த்தகம், எரியாற்றல், கல்வி உள்ளிட்ட பல துறைகளிலான இருதரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் அவர்களுக்கு முன் கையெழுத்தாகின. மேலும், சீன-அல்ஜீரிய கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.