இருதரப்பு பயணமாக முதல்முறையாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக மாலத்தீவு ஒருபோதும் செயல்படாது என்று உறுதியளித்தார்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், இதைக் கூறியதோடு மேலும், இந்தியா தங்களுடைய மதிப்புமிக்க கூட்டாளி மற்றும் நண்பராக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவுடனான ஒத்துழைப்பு, குறிப்பாக பாதுகாப்பில் முன்னுரிமையாக இருக்கும் என்று எடுத்துரைத்தார்.
முன்னதாக, இந்தியா அவுட் என்ற தனது தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் சீனா ஆதரவாளராக கருதப்படும் முய்சு, தற்போது இவ்வாறு கூறியுள்ளது சர்வதேச அரசியலில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
அவர் தனது ‘மாலத்தீவுகளுக்கு முதலில்’ கொள்கையின் கீழ் சர்வதேச உறவுகளை பன்முகப்படுத்தினாலும், அதனால் இந்தியாவின் நலன்களை சமரசம் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தார்.