ஈரான் உச்ச தலைவர் கொமேனி இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் அஞ்சலி : சிறப்பு தொகுப்பு!

Estimated read time 1 min read

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கொமேனியின் இறுதி சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து, தங்கள் தலைவருக்கு பிரியாவிடை அளித்துள்ளனர். 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இறுதிச் சடங்கில் பங்கேற்று கொமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போரைத் தொடங்கின. போர் தொடங்கி முதல் அரை மணி நேரத்திலேயே 86 வயதான ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி கொல்லப்பட்டார்.

இதனை கடந்த மார்ச் ஒன்றாம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போரில் கொமேனி கொல்லப்பட்டதாக அறிவித்தார். முதலில் ஈரான் இதற்கு மறுப்புத் தெரிவித்தாலும், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் இடிந்து தரைமட்டமான கட்டிடத்தின் சாட்டிலைட் படங்கள் வெளியானதைத் தொடர்ந்து கொமேனி போரில் பலியானது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அயத்துல்லா அலி கொமேனி, அவரது மகள், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக ஈரான் அறிவித்தது.

தொடர்ந்து ஈரானில் 7 நாட்கள் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும் உச்ச தலைவரின் படுகொலைக்கு நீதிக் கேட்டு ஈரான் போர்ச் சூழலிலும் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுவாக இஸ்லாமிய முறைப்படி, மரணமடைந்த 24 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்வது வழக்கம் என்றாலும் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து போர் நடந்து வந்ததால் அயத்துல்லா அலி கொமேனியின் இறுதி சடங்கு தள்ளி வைக்கப்பட்டது.

நிரந்தர போர் நிறுத்தத்துக்கான முயற்சியில் ஈரானும் அமெரிக்காவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், ஒரு வாரம் அரசு முறை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் முன்னாள் உச்ச தலைவரின் இறுதி சடங்கு தொடங்கியுள்ளது.

கடந்த 36 ஆண்டுகளாக ஈரானின் உச்ச தலைவராக இருந்து நாட்டை வழிநடத்தி வந்த அயத்துல்லா அலி கொமேனியின் உடல் தாங்கிய சவப் பெட்டி ஈரானின் மூவர்ணக் கொடியால் போர்த்தப் பட்டிருந்தது.

கண்ணீர் பெருகிய கண்களுடனும் கனத்த இதயத்துடனும் மக்கள் கொமேனியின் சவப் பெட்டியை ஈரானின் ‘கிராண்ட் மொசல்லா’வுக்குள் சுமந்து சென்றனர்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக தலைநகர் தெஹ்ரானில் உள்ள (Grand Mosalla) கிராண்ட் மொசல்லாவில் வைக்கப்பட்டுள்ள கொமேனியின் இறுதி சடங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகள், மதப் பெரியோர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த துக்கக் கரமான நிகழ்வில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் கண்ணீர் விட்டு அழுத காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.

இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் பவித்ரா மார்கரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் பிரத்யேக அழைப்பின் பேரில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவர் மெஹ்பூபா முஃப்தி, காங்கிரஸ் கட்சியின் வெளியுறவு விவகாரத் துறையின் தலைவரான சல்மான் குர்ஷித்தும் பங்கேற்றுள்ளனர்.

ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ், சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலை குழுவின் துணைத் தலைவர் ஹே வெய், ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் மற்றும் வங்கதேசம் நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமது, துர்க்மெனிஸ்தானின் மக்கள் சபைத் தலைவர் குர்பங்குலி பெர்டிமுகமெடோவ் அஞ்சலி செலுத்தினர்.

ஈராக் அதிபர் நிசார் அமேடி, ஆர்மீனியப் பிரதமர் நிகோல் பாஷினியன், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர், குர்திஸ்தான் பிராந்திய அதிபர் நெச்சிர்வன் பர்சானி ஆகியோர் பங்கேற்று தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

ஓமன், ஈராக், அஜர்பைஜான், வங்கதேசம், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்களும் மற்றும் நிகராகுவா, காங்கோ மற்றும் புர்கினா பாசோ நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் எகிப்திய செனட் சபையின் தலைவரும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் பொதுச் செயலாளரும் கொமேனியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டுள்ளனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ‘டி-8’ பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர்களும் இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 1989-ஆம் ஆண்டு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் அயத்துல்லா ருஹோல்லா கொமேனியின் இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் உட்பட ஒரு கோடி மக்கள் கலந்துக் கொண்டனர். அதற்குப் பிறகு ஈரானில் நடைபெற்ற மிகப்பெரிய சர்வதேசக் கூட்டங்களில் ஒன்றாக அலி கொமேனியின் அஞ்சலி விழா அமைந்துள்ளது.

க்ஷதெஹ்ரானில் நடைபெறும் சடங்குகளுக்குப் பிறகு, கொமேனியின் பூத உடல் ஈராக்கின் புனித நகரங்களான நஜஃப் மற்றும் கர்பலாவிற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், பிறகு வரும் ஜூலை 9ம் தேதி கொமேனியின் பிறந்த இடமான ஈரானின் வடகிழக்கு நகரமான மஷ்ஹாத்தில் உள்ள இமாம் ரெசா (Imam Reza) ஆலயத்தில் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக கொமேனியின் 14 மாத பேத்தியான ஜஹ்ரா முகமது கோல்பயேகானியின் சவப்பெட்டியும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த சிறிய சவப்பெட்டி காண்போரின் இதயங்களை உலுக்கி எடுத்தது.

You May Also Like

More From Author