ரஷ்யாவின் கசானில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சாத்தியமான இருதரப்பு சந்திப்புகள் என்பது குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
இந்த உச்சிமாநாட்டில் எல்லை மோதல் விவகாரத்தில் தற்போதைய முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் விவாதிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, 2022இல் பாலியில் நடந்த ஜி20 மற்றும் 2023இல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாடு உட்பட முந்தைய உச்சிமாநாடுகளில் இரு தலைவர்களும் சுருக்கமாக உரையாடியிருந்தாலும், ஒரு நேரடி சந்திப்பு அவர்களின் முதல் கணிசமான உரையாடலைக் குறிக்கும்.