திருப்பூரில், சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூரில், நவீன் என்பவர், சாய ஆலை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் 5 பேர் ஈடுபட்டனர். அப்போது விஷவாயுவால் பாதிக்கப்பட்ட 5 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், சரவணன், வேணு கோபால் ஆகியோர் வழியிலேயே உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரி கிருஷ்ணனும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சாய ஆலை உரிமையாளர் நவீன், மேலாளர் தனபால் உள்ளிட்ட 4 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க, முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது சாய ஆலை நிர்வாகம் ஒப்புக் கொண்டது. அதன்படி 3 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சடலங்களை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.