வியாசர்பாடி : தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து சேதம்!

Estimated read time 0 min read

சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், குடிசை அமைத்து, பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

அங்குள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை திடீரென புகை வரவே மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதற்குள் அடுத்தடுத்த குடிசை வீடுகளுக்கு தீ பரவியது. தகவல் அறிந்ததும் வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சுத் திணறலுக்குள்ளான இருவர், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தை பெரம்பூர் எம்எல்ஏ ஆர்டி சேகர், புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் முத்துக்குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறி, அருகே உள்ள மாநகராட்சி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

You May Also Like

More From Author